40 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது
40 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட மாணவர்களுக்கே இந்த கதி!
ஐயா அன்பில் மகேஷ் எங்கே இருக்கிறார்?? ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க வரும் இடத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உணவிலேயே இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இப்போது வரை அங்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வரவில்லை. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு என்பது வெறும் உணவு மட்டுமல்ல, அது பல குழந்தைகளின் ஊட்டச்சத்து ஆதாரம். இத்திட்டத்தில் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்ய வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் தலையாய கடமை.
ஆனால் அத்தனை குழந்தைகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படும் அளவுக்கு உணவின் தரம் மோசமாக இருந்தது என்பது அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாட்டையே காட்டுகிறது. சமையல் கூடங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுகிறதா?
பொருட்களின் தரம் சரிபார்க்கப்படுகிறதா? என்ற கேள்விகள் இங்கே எழுகின்றன.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வேதனையளிக்கிறது. குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மெத்தனப் போக்கு இனி வரும் காலங்களில் தொடரக்கூடாது. ஒருமுறை தவறு நடப்பதே பெரிய குற்றம் எனும் போது, அடிக்கடி இதுபோன்ற செய்திகள் வருவது திமுக அரசின் தோல்வியையே பறைசாற்றுகிறது.