
சென்னை:
17-வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று முறைப்படி தொடங்கியது. இக்கூட்டத்தொடரின் தொடக்கமாக, மாண்புமிகு தமிழக ஆளுநர் அவையில் உரையாற்றினார். அப்போது, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவோடு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றி கழக அரசைப் பாராட்டிப் பேசினார்.
ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் இதோ:
"மக்களே நாட்டின் உண்மையான அதிபர்கள்"
"மக்கள் தான் நாட்டின் உண்மையான அதிபர்கள்" என்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை நினைவு கூர்ந்த ஆளுநர், ஜனநாயகத்தின் இதயமாகவும் அறிவுஜீவிகளுமாகவும் விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப சட்டங்களை இயற்றி மக்கள் நலனைக் காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்றின் ஒன்றியமே உண்மையான ஜனநாயகம் என்ற அண்ணல் அம்பேத்கரின் கூற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட அரசியல்
தமிழ்நாட்டில் இத்தகைய உன்னதமான ஜனநாயகம் தழைத்தோங்க, சாதி, மதம், மொழி, இனம் மற்றும் பண பலத்தின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு நிற்கும் தமீழக வெற்றி கழகத்தின் தலைவரான மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் கீழ் மட்டுமே இது சாத்தியம் என்று தமிழ்நாட்டு மக்கள் உறுதியாக முடிவு செய்து இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஆளுநர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1967, 1977-ஐத் தொடர்ந்து 2026-ல் வரலாற்றுப் புரட்சி!
"மாற்றம் ஒன்றே மாறாதது" என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மாற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. கட்சி தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளுக்குள், பல தடைகளையும் பண பலத்தையும் தகர்த்து, தனி ஒருவராக மக்களின் பேராதரவோடு முதலமைச்சர் விஜய் இந்த வரலாற்றுச் சாதனை அரசை அமைத்துள்ளார்.
அரசியல் வரலாற்றை ஒப்பிட்டுப் பேசிய ஆளுநர்:
"இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1967-ல் பேரறிஞர் அண்ணாவும், 1977-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புரட்சிகளை ஏற்படுத்தினர். அதே போன்றதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ல் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் தனி ஒருவராக நிகழ்த்திக் காட்டியுள்ளார்," என்று புகழாரம் சூட்டினார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரு புதிய மறுமலர்ச்சியையும், பெரும் புரட்சியையும் இந்த அரசு குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டியுள்ளது என்று ஆளுநர் தனது உரையில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.