Tamil Nadu

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.87,399 கோடி கடன்: மின்சாரத் துறை குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பரபரப்பு தகவல்!

Tvk

சென்னை: தமிழ்நாட்டின் மின்சாரத் துறை சந்திக்கும் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் சொந்த மின் உற்பத்தியின் வீழ்ச்சி குறித்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் புள்ளிவிவரங்களுடன் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மின்வாரியத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மின்சார வாரியம் ரூ. 87,399 கோடி அளவிற்குக் கடன் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் அதிகபட்ச மின்தேவை 21,300 மெகாவாட்டாக உள்ள நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) மூலம் வெறும் 3,495 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

மாநிலத்தின் இந்த மாபெரும் மின்தட்டுப்பாட்டைச் சமாளிக்க, அரசு பெருமளவில் வெளியீட்டு கொள்முதலையே நம்பியுள்ளது. அதன்படி, மத்திய தொகுப்பில் இருந்து 13,566 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்காகப் பெறப்படுகிறது. மேலும், பற்றாக்குறையை ஈடுகட்ட குறுகிய கால ஒப்பந்தங்கள் அடிப்படையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 6.75 என்ற விலைக்குக் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தத் தரவுகள், முந்தைய ஆண்டுகளில் மின்வாரியத்தின் மீது ஏற்றப்பட்ட மாபெரும் கடன் சுமையையும், சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசர தேவையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.