தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இந்த முறை இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாக இது நடத்தப்படுகிறது.
சுய கணக்கெடுப்பு முறை (Self-Enumeration):பொதுமக்கள் தங்களின் குடும்ப விவரங்களை தாங்களாகவே இணைய வழியில் எளிதாகப் பதிவு செய்யும் 'சுய கணக்கெடுப்பு' வசதி இன்று முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான se.census.gov.in என்ற முகவரிக்குச் சென்று தங்களது விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம்.
33 கேள்விகள்:இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 33 வகையான முக்கிய வினாக்கள் இடம்பெற்றுள்ளன.
அடையாள எண் (ID) முக்கியம்:இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு, திரையில் ஒரு 'சுய பதிவேட்டு அடையாள எண்' (Unique ID) தோன்றும். பொதுமக்கள் இந்த எண்ணைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது, ஏற்கனவே சேமித்து வைத்துள்ள அடையாள எண்ணைக் காண்பித்தால், மீண்டும் அந்த 33 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது சரியான விவரங்களை வழங்கி, இந்த தேசிய அளவிலான முக்கியப் பணிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.







