மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு இணையாக விளையாட்டுத் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். பள்ளிப் பருவத்திலிருந்தே விளையாட்டை ஒரு அங்கமாக மாற்றுவதன் மூலம் மாணவர்களின் உடல்நலம் பேணப்படுவதோடு, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க முடியும். தற்போதைய சூழலில், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப் பழக்கம் மற்றும் மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் விளையாட்டுத் துறைக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. பிரேசில் போன்ற நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு, இளைஞர்களின் கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்புவதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்காகப் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து, சர்வதேச தரத்திலான விளையாட்டுப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்வதே எங்களது முதன்மையான இலக்கு. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் 8 முதல் 10 வயதிலேயே வீரர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிப்பதைப் போல, நாமும் சிறு வயதிலேயே திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வையும் பயிற்சியையும் வழங்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் இலக்கை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். இதற்காக மாவட்ட மற்றும் கிராம அளவில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, சிலம்பம் போன்றவற்றை ஊக்குவிப்பதோடு, சர்வதேச தரத்திலான போட்டிகளைத் தமிழ்நாட்டில் நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 25,000 முதல் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையிலான நவீன மைதானங்களை உருவாக்குவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன், தமிழ்நாட்டை ஒரு 'பிட்டஸ்ட் ஸ்டேட்டா' (Fittest State) மாற்றவும், உலகத் தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்புகளை உருவாக்கவும் நாங்கள் உறுதியுடன் பணியாற்றி வருகிறோம்.