Tamil Nadu

தவெக ஆட்சியால் தைரியம் வந்துச்சு" - முன்னாள் மேயர் மற்றும் அதிகாரி மீது ஒப்பந்ததாரர் பகிரங்க புகார்!

Tvk
தவெக ஆட்சியால் தைரியம் வந்துச்சு" - முன்னாள் மேயர் மற்றும் அதிகாரி மீது ஒப்பந்ததாரர் பகிரங்க புகார்!

திருப்பூர் மாநகராட்சி பல்லடுக்கு வாகன நிறுத்த டெண்டர் ஒதுக்கீட்டில், தனது கையெழுத்தைப் போலி ஆவணங்கள் மூலம் சித்தரித்து, விதிகளை மீறி பல லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஒப்பந்ததாரர் அரவிந்த் என்பவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

லஞ்சக் கோரிக்கையும் அச்சுறுத்தலும்

செய்தியாளர்க சந்திப்பில் ஒப்பந்ததாரர் அரவிந்த் தெரிவித்ததாவது:

"திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள பல்லடுக்கு பார்க்கிங் வசதிக்கான மாநகராட்சி டெண்டரை, ஆண்டுக்கு 73 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நான் எடுத்திருந்தேன். இதற்கு முன்பாக பாரதி என்பவர் 90 லட்ச ரூபாய்க்கு எடுத்திருந்த டெண்டரை பாதியிலேயே கைவிட்டதால், அடுத்த பிட்டராக (Bidder) நான் தேர்வு செய்யப்பட்டேன்.

நான் டெண்டர் எடுத்து சில நாட்களிலேயே, முன்னாள் மண்டல நிர்வாகி ராஜசேகர் என்பவர், எனக்கு வருவாய் அதிகமாக வரும் எனக் கூறி, 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுத்தார். இதற்கு அப்போதைய முன்னாள் மேயர் தினேஷ் குமார் அவர்களும் எனக்குப் பல்வேறு வழிகளில் அழுத்தம் கொடுத்தார்."

லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

உயிருக்கு பயந்து இத்தனை நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்ததாகவும், தற்போது ஆட்சி மாற்றத்திற்குப் பின் கிடைத்துள்ள தைரியத்தால் இந்த ஊழலை வெளிக்கொண்டு வருவதாகவும் ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட முன்னாள் மேயர் தினேஷ் குமார் மற்றும் அதிகாரி ராஜசேகர் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு (Vigilance and Anti-Corruption) விரிவான புகார்க் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழல் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்தகட்ட விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.